Wednesday, May 29, 2013

முயற்சியே மூளைக்கு விருந்து!

வீக்கே Thoughts-6 @ www.vkmathology.blogspot.in
 
அந்த காலத்தில் தொடக்கப்பள்ளிகளில் ஆரம்பகட்டத்தில் இருந்தே கணித வகுப்பில் வாய்ப்பாடு என்ற பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது.
 
வாய்ப்பாடு என்ற புத்தகமே தனியாக இருக்கும். அதில் 2-ம் வாய்ப்பாடு முதல் 16-ம் வாய்ப்பாடு வரை ஒவ்வொன்றும் 16 வரை கொடுக்கப்பட்டிருக்கும்.
 
கணித வகுப்பில் ஒவ்வொரு நாளும் அதை மனப்பாடம் செய்வதற்கு  பயிற்சி கொடுத்து வருவார்கள். உதாரணமாக கணித வகுப்பு ஆரம்பித்தவுடன் முதல் மாணவனிடம் இருந்து ஆரம்பித்து ஒவ்வொருவராக அடுத்தடுத்த நிலையை சொல்ல வேண்டும். இது தான் அப்பயிற்சி முறை. அதாவது 2-ம் வாய்ப்பாடு என்று எடுத்துக் கொண்டால், முதல் மாணவன் 2*2 = 4 என்று கூறுவான். அடுத்த மாணவன் 2 * 3 = 6 என்று கூற, இப்படியாக 15-வது  மாணவர் 2*16 = 32 என்று கூற வாய்ப்பாடு தானாகவே மனப்பாடம் ஆகி விடும்.

அதன் பிறகு 2*16, 2*15, 2*14...என்று 2*2  வரை வாய்ப்பாட்டை தலைகீழாக அந்த வாய்ப்பாட்டை பயிற்சி செய்வார்கள். இப்படியாக அந்த வாய்ப்பாட்டை தான் கூறுவதோடு, மற்றவர்கள் கூறுவதையும் கேட்டு, முழுமையாக தானாகவே மனப்பாடம் ஆகிவிடும்.

இத்தகு பயிற்சி மூளைக்கு விருந்தாகவும், மனதுக்கு தன்னம்பிக்கையையும் கொடுக்கும் பகுதியாக அமைந்தது. தன்னம்பிக்கையை வளர்க்க கணிதம் ஒரு காரணியாக அமைகிறது  என்றால் அது மிகையாகாது.

இன்று இதே பயிற்சிகள் சிடி, யு-டியூப், டிவி என்று ஏராளமான மீடியாக்களில் வெவ்வேறு வடிவில் வந்து விட்டாலும், அடிப்படயில் வாயால் படித்து மனப்பாடம் செய்த வாய்ப்பாடு தான்  அழியாத கோலங்களாய் இன்றும் மனதில் நிலைத்து நிற்கிறது. 
 
-வீக்கே @ www.vkmathology.blogspot.in -

No comments: